ஹஜ்ஜூ பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, கடந்த மே 27 முதல் ஜூன் 4 -ஆம் தேதி வரை, சுமார் 3 லட்சம் மலேசியர்கள் தென் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹாட் யாய் - சோங்க்லா ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சிட்டிபாங் சித்திபதராபிரபா வெளியிட்டுள்ள தகவலில், மலேசிய சுற்றுலாப் பயணிகள் நாராதிவாத், யாலா, சோங்க்லா மற்றும் சாத்தூன் ஆகிய பகுதிகளில் உள்ள ஒன்பது எல்லைகளின் வழியாகத் தாய்லாந்திற்கு வருகை புரிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் காலகட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஹோட்டல் அறைகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டதுடன், தாய்லாந்தின் சுற்றுலாத்துறைக்கு 1 பில்லியன் பாட், மலேசிய மதிப்பில் 123.2 மில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், எல்லைச் சாவடிகளில் 3 முதல் 4 மணி நேர காத்திருப்புகளுக்கு மக்கள் உள்ளானதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், தென் தாய்லாந்தானது,மலேசியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக நீடிக்க வேண்டுமெனில், குடிநுழைவுச் சோதனை தாமதங்களை விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








