சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, கோலாலம்பூர் மாநகரில் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டவர்களுக்கு சொந்தமான 101 வாகனங்களை பறிமுதல் செய்தது.
“ஓப்ஸ் பேவா” என்ற பெயரில் இந்த சோதனை நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக கூட்டரசு பிரதேச ஜேபிஜே அமலாக்கப்பிரிவின் தலைவர் ராஜா நூர் சுஹாய்டா ராஜா அஸ்மி தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்நிய நாட்டவர்களின் வர்த்தக வாகனங்கள் அதிகளவில் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் விளக்கினார்.
சாலையை பயன்படுத்தும் அந்நிய வாகனமோட்டிகள், மலேசிய போக்குவரத்து சட்ட விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








