கோலாலம்பூர், பிப்ரவரி.04-
கோலாலம்பூரில் முன்மொழியப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தேர்தல் குறித்த ஆய்வை மறுபரிசீலனை செய்யுமாறு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹான்னா இயோவை பெரிக்காத்தான் நேஷனல் வலியுறுத்தியுள்ளது.
கோலாலம்பூர் மாநகர சபையான டிபிகேஎல்லின் பங்களிப்பையும், செயல்திறனையும் வலுப்படுத்துவதற்கான முதன்மைக் கருவியாக இது போன்ற தேர்தல்களை வடிவமைப்பது, 'சரியான புரிதல் இல்லாமல் தவறாக வழிநடத்தப்படுவது போலானது' என பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைப் பொறுப்பாளரான தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவின் உண்மையான நோக்கம் டிபிகேஎல்லின் செயல்திறனை மேம்படுத்துவது என்றால், அதன் முக்கிய நிர்வாகம் மற்றும் ஆளுகைப் பிரச்சினைகளில் ஆய்வை மையப்படுத்துவதே மிகவும் எதார்த்தமான நடைமுறைக்கு உகந்த அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் டிபிகேஎல்லின் அமைப்புசார் கட்டமைப்பு, தலைமைத்துவத்தின் தரம், மனிதவள மேலாண்மை, பிரிவுகள், முகமைகள் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு இடையேயான ஒருங்கிணைப்பு, நேர்மை மற்றும் அமலாக்க வழிமுறைகள், முன்னுரிமை நிர்ணயம் ஆகியவை அடங்கியுள்ளதாக தக்கியுடின் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே வேளையில், முடிவெடுப்பதில் தரம், வேகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை இவற்றில் அடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதால், சிறந்த சேவை வழங்கப்பட்டு, நல்லாட்சி அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள தக்கியுடின், மாறாக புதிய பிரச்சினைகளையே உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








