குவந்தான், நவ.18-
வேப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாடு நாட்டில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி இளையோர்கள் மத்தியில் குறிப்பாக பகாங் மாநிலத்தில் போதைப்பொருளை தவறாக பயன்படுத்தி வருகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுல்தான் தெரிவித்தார்.
இளையோர்கள் போதைப்பொருளை கவர்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தொடக்கமாக இருப்பது மின் சிகரெட்டாகும் என்று சுல்தான் குறிப்பிட்டார்.
மின் சிகரெட் உடலுக்கு பெரும் பாதிப்பை உண்டு பண்ண வல்லதாகும். அதனை முற்றாக தடை செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.








