அலோர்காஜா, நவ. 29-
சாலையில் சூழ்ந்திருந்த வெள்ள நீரின் மத்தியின் லோரி ஒன்றின் பின்புறம் பயணித்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், சறுக்கி விழுந்து, நீரின் வேகத்தில் அடித்துச்செல்லப்படடு, மரணப்பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.32 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா, லுபோக் சீனா, கம்போங் சுங்கை சிப்புட், ஜாலான் பத்து ஆலாங்கில் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி, நீரின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்டதை நேரில் பார்த்த இதர வாகனமோட்டிகள் அளித்த தகவலைத் தொடர்ந்து மஸ்ஜிட் தானா தீயணைப்பைபு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
நீரின் மட்டம் 1.2 மீட்டர் வரை உயர்ந்து, கரைபுரண்டோடும் நீர் பெருக்கத்தின் மத்தியில் அந்த மோட்டார் சைக்கிளோட்டியை தேடும் பணி சுமார் 40 நிமிடம் முடுக்கி விடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் 34 வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டி, ஒரு மரக்கட்டையைப்பிடித்துக்கொண்டு, உயிருக்குப் போராடிய நிலையில், அவரே தம்மை காப்பாற்றிக்கொண்டு, மீண்டு வந்ததாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.
அடை மழை பெய்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் நீரின் மட்டம் உயர்ந்து, வெள்ளம் கரைபுரண்டோடும் பட்சத்தில் அதனை எதிர்த்து பயணம் செய்து ஆபத்து, இடர்களை எதிர்கொள்ள வேண்டாம் என்று வாகனமோட்டிகளுக்கு அப்பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.








