சிலாங்கூர், டெங்கிலில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோயில் தலைவர் எம். பரமகுருவை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
பரமகுரு மீதான குற்றச்சாட்டில் குறைபாடுகள் இருந்ததைக் கண்டறிந்த நீதிபதி ஹஸ்லினா ஹுசைன், இந்த வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து அவரை விடுவிக்க உத்தரவிட்டார். பரமகுரு குற்றம் செய்யும் நோக்கத்தோடு நிலத்திற்குள் நுழைந்தார் என்பதை அரசுத் தரப்பு தனது குற்றச்சாட்டில் சரியாகக் குறிப்பிடவில்லை என்றும், இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய முடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நில உரிமையாளருக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட நில உரிமைத் தகராறு காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை முழு விசாரணைக்கு உட்படுத்துவது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் கோயில் தலைவர் பரமகுரு சார்பில் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் ஆஜராகினார்.








