கோலாலம்பூரில் போலி ஆவணங்களைத் தயாரித்து வந்த வெளிநாட்டுச் கும்பல் ஒன்றை மலேசியக் குடிநுழைவுத்துறை அதிரடியாக முறியடித்துள்ளது.
நேற்று ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு 11 மணியளவில் தாமான் ஸ்ரீ கூச்சிங் மற்றும் தாமான் புக்கிட் செராஸ் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில், இந்த மோசடியின் 'சூத்திரதாரி' உட்பட மூன்று இந்தோனேசியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்களிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 119 போலி கடப்பிதழ்கள், அச்சு இயந்திரங்கள் மற்றும் 1,500 ரிங்கிட் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டாத்தோ சக்கரியா ஷாபான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஃபோமேமா மருத்துவப் பரிசோதனையில் தகுதி பெறாத வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கடப்பிதழ்களை மாற்றி அமைத்து, தகுதி பெற்றது போல் போலியாக ஆவணங்களை தயாரிப்பதே இவர்களின் உத்தியாகும். இதற்காக இவர்கள் தலா 80 ரிங்கிட் முதல் 130 ரிங்கிட் வரை வசூலித்துள்ளனர்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த டத்தோ ஜக்கரியா ஷபான், நாட்டின் சட்டத்திட்டங்களை மீறும் இத்தகையச் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.









