கோலாலம்பூர், நவ.13-
கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த 2018 ஆம்ஆண்டு முதல் விடு புகுந்து கொள்ளையடித்தல் உட்பட 44 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று நம்பப்படும் நான்கு கொள்ளையர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
வியட்நாமியப் பிரஜைகளான அந்த நான்கு கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையின் போது, போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் நான்கு கொள்ளையர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் இம்பியில் உள்ள ஒரு கொண்டோமினியம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 17 ஆவது மாடியில் ஒரு வீட்டில் இந்த அதிரடித் தாக்குதல் நடைபெற்றதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க நால்வரும் சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர். நால்வரும் சுட்டு வீழ்த்தப்பட்டது மூலம் துப்பாக்கிகள் மற்றும் வெட்டுக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








