ஜோகூர் பாரு, மே.27-
இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்வதற்கு ஜோகூர் மாநிலத்தில் எந்த விதத் தடையும் இல்லை என்றும், எப்போதுமே அது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அம்மாநில இளவரசர் மற்றும் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், இராணுவப் பயிற்சிகளானது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மிகவும் அவசியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் அரச குடும்பமும், மாநில அரசாங்கமும் அதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள, அவசியமற்ற தடைகள் இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், பணியில் உள்ள ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் வீரர்களுக்கும் தமது ஆதரவு தொடரும் என்றும் துங்கு இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பகாங் இளவரசர் தெங்கு ஹஸானால் இப்ராஹிம் அலாம் ஷா, மாநிலத்தில் இராணுவப் பயிற்சி நடத்துவதற்கு முன்னர், பகாங் சுல்தானின் அனுமதியைப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








