கூலிம், பிப்ரவரி.11-
கூலிம் மாவட்டத்தின் தூய்மையைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணவும் மாவட்டத்தில் பெருகி வரும் காகங்களைச் சுடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ ஹஜி ஹெல்மி பின் யூசோப் தெரிவித்தார்.
கூலிம் நகரில் காகங்களின் இனப் பெருக்க அபரிமிதமாக அதிகரித்துள்ளதால், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புகளில் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
காகங்களின் எச்சத்தினால் வாகனங்கள், கட்டிடங்கள், வீட்டின் கூரைகள் மற்றும் பொதுச் சொத்துகள் கடுமையாக அசுத்தமடைவது குறித்து நகராண்மை கழகத்திற்குத் தொடர்ச்சியான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், காகங்களின் இடைவிடாத சத்தம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக அமைந்துள்ளதாகவும் டத்தோ ஹெல்மி சுட்டிக் காட்டினார்.
இந்தக் காகம் சுடும் நடவடிக்கையானது, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்டு, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். கூலிம் நகரைத் தூய்மையாகவும் ஆரோக்கியமான வாழ்விடமாகவும் மாற்ற பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் காகம் வேட்டையாடும் நடவடிக்கையின் முதற்கட்டமாக, கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கூலிம் மாவட்டத்தின் முக்கிய 6 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஒரே நாளில் மட்டும் மொத்தம் 1,217 காகங்கள் சுடப்பட்டதாக டத்தோ ஹஜி ஹெல்மி பின் யூசோப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.








