வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில், கட்சியின் உதவித் தலைவர்களாக சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா ஆகியோரை பிகேஆர் நியமித்துள்ளது.
இன்று சனிக்கிழமை ஜோகூர், பத்து பஹாட்டில் நடைபெற்ற கட்சியின் அரசியல் பணியகம் மற்றும் மத்திய அரசியல் குழுவின் மாதாந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிகேஆர் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். கட்சியின் மத்திய அளவிலான செயல்பாடுகளை வலுப்படுத்த இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக சைபுடின் கட்சியின் பொதுச்செயலாளராகவும், ஜாலிஹா ஜோகூர் மாநில பிகேஆர் தலைவராகவும் இருந்தனர். இவர்களுடன் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ரோலண்ட் எங்கான், மற்றும் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, டத்தோஸ்ரீ ஆர். ரமணன், டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன், சாங் லி காங் ஆகியோரும் நடப்பு உதவித் தலைவர்களாக உள்ளனர்.
மேலும், மாநிலத் தேர்தல்கள் தயார் நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், வரும் ஜூன் 26 முதல் 28 ஆம் தேதி வரை மலாக்காவில் நடைபெறவிருந்த பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு, வரும் ஆகஸ்ட் 14 முதல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஃபஹ்மி கூறினார்.








