ஜோகூர் பாரு, ஜூன்.21-
ஜோகூர் மாநிலத்தில் உள்ள பத்து பகாட் பகுதியில், இன்று அதிகாலை 1.17 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவாகியுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பத்து பகாட் பகுதிக்கு தென்மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் பத்து பகாட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ள மெட்மலேசியா, தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 4 ஆகிய தேதிகளிலும் இப்பகுதியில் லேசான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த மாவட்டத்தில் பதிவாகும் ஆறாவது நிலநடுக்கம் இதுவாகும். மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி செகாமாட்டில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.








