அலோர் காஜா, பிப்ரவரி.03-
அலோர் காஜா, காடேக் பகுதியில் உள்ள ஒரு வெந்நீர் ஊற்றுக் குளத்தில் ஆறு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதிவாசிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்தின் போது அச்சிறுவன், அங்கிருந்த பொழுதுபோக்கு மையத்தில் உள்ள பெரியவர்கள் பயன்படுத்தும் குளத்தில் மயங்கிய நிலையில் மிதந்து கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில் தகவல் தெரிந்தவுடன், அருகாமையில் இருந்த தன்னார்வ மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று நீரில் மூழ்கிய சிறுவனுக்குச் சிகிச்சையளித்துள்ளனர்.
அதே வேளையில், அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அச்சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், சிகிச்சைப் பலனின்றி இரவு 8.24 மணியளவில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுவனின் சடலமானது சவப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது தாயார் மற்றும் உறவினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.








