இனத்தை மட்டுமே மையமாகக் கொண்ட சிந்தனையை கைவிட்டு, அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைந்து நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என்று மலாக்கா ஆளுநர் துன் முகமட் அலி முகமட் ருஸ்தாம் வலியுறுத்தியுள்ளார்.
தமது 77-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கடந்த பின்னரும் மலேசியாவில் இனவாதம் புதிய உச்சத்தை எட்டுவது கவலையளிப்பதாகக் கூறினார்.
இன அடிப்படையிலான முன்முடிவுகள், அவதூறுகள் மற்றும் சக மலேசியர்களை இழிவுபடுத்தும் போக்கு தினந்தோறும் அதிகரித்து வருவதாக அலி ருஸ்தாம் வேதனை தெரிவித்தார்.
“நாம் இன்னும் எவ்வளவு காலம் இனவாதிகளாகவே இருக்கப் போகிறோம்? உலகம் அழியும் வரைதானா, அல்லது இந்த அழகான நாட்டை நாமே அழிக்கும் வரைதானா?” என்று அவர் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
கூட்டரசு அரசியலமைப்பும் ருக்குன் நெகாராவும் பல்வேறு இன மக்களின் கூட்டு ஞானத்தால் உருவாக்கப்பட்டவை என்றும், அவற்றின் அடித்தளமே மலேசியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் அவர் நினைவூட்டினார்.








