சரவாக்கில் வேகமெடுத்து வரும் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான திறன்மிக்க உள்ளூர் பணியாளர்களை உருவாக்கும் முயற்சியை சி.ஐ.டீ.பி தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அகாடமி பினான் மலேசியா மற்றும் சி.ஐ.டீ.பி டெக்னாலஜிஸ் சரவாக் நடத்திய 12-ஆவது பட்டமளிப்பு விழாவில், கட்டுமானத் துறையின் பல்வேறு திறன் பயிற்சிகளை முடித்த 150 பேர் சான்றிதழ் பெற்று பட்டம் பெற்றனர்.
2030-ஆம் ஆண்டுக்குள் சரவாக்கின் மொத்த பணியாளர்களில் 30 விழுக்காடு, அதாவது சுமார் 5 லட்சம் பேர் திறன்மிக்க பணியாளர்களாக இருக்க வேண்டும் என்பது மாநிலத்தின் இலக்காகும்.

20 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்பிலான முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏர் கண்டிஷனிங், கனரக இயந்திர இயக்கம், வெல்டிங், மின் இணைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
இதுவரை எ.பீ.எம் சரவாக் மற்றும் சி.ஐ.டீ.பி டெக்னாலஜிஸ் சரவாக் மூலம் 38,988 திறன்மிக்க பணியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில், 2012 முதல் 2025 வரையில் சி.ஐ.டீ.பி திறன் பயிற்சித் திட்டங்களின் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும், இந்த திவேட் கட்டுமானப் பயிற்சிகளை முடித்தவர்களில் 88 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.









