பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தற்காலிக விடுப்பில் இருப்பது, மாநிலத் தேர்தல் மற்றும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கான கட்சியின் ஆயத்தப் பணிகளை பாதிக்காது என்று பிகேஆர் இளைஞர் அணித் தலைவர் காமில் முனிம் தெரிவித்துள்ளார்.
துணைத் தலைவரின் பொறுப்புகளை இடைக்காலமாக டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் ஏற்றுள்ள நிலையில், தேர்தல் இயக்குநராக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடர்ந்து செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.
கட்சியை வலுப்படுத்துவதிலும், தேர்தல்களுக்குத் தயாராவதிலும் பிகேஆர் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கமில் தெரிவித்தார்.
நூருல் இஸ்ஸா, முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்வதற்காக தேசிய மாநாட்டுக்குப் பின்னர் தற்காலிக விடுப்பு கோரியிருந்தார். அவரது பதவி விலகல் கோரிக்கையை தலைவர் மன்றம் நிராகரித்து, படிப்பில் கவனம் செலுத்த தற்காலிக விடுப்பு வழங்கியது.
கட்சியின் இந்த முடிவை இளைஞர் அணியினர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கமில் கூறினார்.








