கோலாலம்பூர், ஏப்ரல்.19-
மலாக்கா நீரிணையின் சூழலை ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட முடியாது என்றும், இப்பகுதி தொடர்ந்து அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை மலேசியா உறுதிச் செய்யும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார். மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பன்னாட்டுச் சட்டங்களையும் கடல்சார் வணிகச் சுதந்திரத்தையும் மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் சந்திக்கும் சவால்கள் போன்ற சூழல் இந்த மண்டலத்தில் ஏற்பட வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான பகைமைப் போக்குகள் ஏதுமின்றி, ஆசியான் ஒத்துழைப்புடன் மலாக்கா நீரிணையின் பாதுகாப்பு தொடர்ந்து நிலை நாட்டப்படும் என்று வலியுறுத்தினார்.








