குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்ய, பெற்றோர் இணையப் பயன்பாட்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, தங்கள் பிள்ளைகளின் இணையச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 -ஆம் ஆண்டிற்கான இணைய பாதுகாப்பு பெற்றோர்-ஆசிரியர் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உடனடியாகப் பகிராமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சரிபார்த்த பின்னரே பகிர வேண்டும் என அறிவுறுத்தினார்.
இணையக் குற்றவாளிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களிடம் இருந்து பணம் அல்லது மின்னணு சாதனங்களுக்கான அணுகலைப் பெற முயற்சிப்பதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் எச்சரித்தார்.
மேலும், இணையவழித் துன்புறுத்தல், குழந்தைகளை பாலியல் நோக்கத்துடன் அணுகுதல் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளையில், குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களுடன் அதிகப்படியான உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்தும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என ஃபஹ்மி அறிவுறுத்தினார்.
“செயற்கை நுண்ணறிவு நண்பன் அல்ல; அது ஒரு கருவி மட்டுமே. அது மனித உறவுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது,” என்றும் அவர் எச்சரித்தார்.








