ஷா ஆலாம், பிப்ரவரி.22-
சிலாங்கூர் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்வித் துறைக்கு, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக சமூகத்தில் அதிகரித்து வரும் மாந்தநேயமற்றக் குற்றச் செயல்களைத் தடுக்கவும், இளைஞர்களிடையே சிறந்த ஒழுக்க விழுமியங்களை உருவாக்கவும் சமநிலையான கல்வி முறை அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தின் முதன்மை வளமாக மனித ஆற்றலே திகழ்வதால், UNISEL பல்கலைக்கழகத்திலும் UIS எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும் 50 விழுக்காடு இலவசக் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுடனும் கல்வியாளர்களுடனும் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், வெறும் தகவல்களைத் தாண்டி மாந்தநேரம் மிக்க தலைமுறையை உருவாக்குவதே கல்வியின் உண்மையான நோக்கம் என்று சுட்டிக் காட்டினார்.








