கோலாலம்பூர், பிப்ரவரி.09-
Deepfake தொழில்நுட்பத்தின் தவறானப் பயன்பாடு உள்ளிட்ட சிக்கலான தொழில்நுட்ப அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்காக, 'செயற்கை நுண்ணறிவான AI நிர்வாகச் சட்ட மசோதா' ஒன்றை இலக்கவியல் அமைச்சு தயாரித்து வருகிறது. இந்த மசோதா இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AI மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை முறைப்படுத்தவும், தகவல்களின் நேர்மையைப் பாதுகாக்கவும், நாட்டின் இலக்கவியல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலுவான மற்றும் விரிவான சட்டக் கட்டமைப்பு அவசியம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இன்று மக்களவையில் மாமன்னரின் உரை மீதான விவாதத்திற்கு அமைச்சின் சார்பில் பதிலளித்துப் பேசிய அவர், “இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று 'பொறுப்புக்கூறல்' ஆகும். AI அமைப்பு முறையை உருவாக்கும் அல்லது பயன்படுத்தும் நிறுவனங்களுக்கான தெளிவான பொறுப்புகளை இது வரையறுக்கும்.
தொழில்நுட்ப வழங்குநர்கள் முன்னெச்சரிக்கையான இடர் மேலாண்மை நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் கூறினார்.








