அலோர் ஸ்டார், பிப்ரவரி.02-
அலோர் ஸ்டார், ஜாலான் தஞ்சோங் பெண்டஹாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நடுத்தர வயது பெண் ஒருவர் மூன்று கத்திக் குத்துக் காயங்களுடன் இன்று காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
வங்கி ஒன்றில் செயல்பாட்டு நிர்வாகியாகப் பணியாற்றி வந்த 52 வயது Zaharullail Basir என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரது மகன்களில் ஒருவர் இன்று காலை 8.45 மணியளவில் தனது தாயார் இறந்து கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
கொல்லப்பட்ட பெண்ணின் உடலில், குறிப்பாக மார்புப் பகுதியில் கத்திக் குத்து காயங்களும், தலை, முகம் மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் வெட்டுக் காயங்களும் இருந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் பஸ்ரி சையிட் அலி தெரிவித்தார்.
விசாரணையில், அந்தப் பெண்ணின் நகைப்பையிலிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி ஆகியவை காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணின் மற்றொரு மகனுக்குத் தொடர்பு இருக்கலாம் என தாங்கள் நம்புவதாக கூறிய சையிட் பஸ்ரி, பாதிக்கப்பட்ட பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போது தலைமறைவாக உள்ள சந்தேக நபரைப் போலீசார் தேடி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.








