பூனை ஒன்றைக் காப்பாற்ற முயன்ற 32 வயது வளர்ப்பு பிராணி பிரியர் ஒருவர், சுமார் நான்கு மீட்டர் ஆழமுள்ள சாக்கடைக் குழிக்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் இன்று மலாக்கா, ஆயர் குரோ, தாமான் மலாக்கா பெர்டானா பகுதியில் நிகழ்ந்தது.
தனது வீட்டின் பின்புறமுள்ள புதர் பகுதியில் இருந்த பூனையைக் காப்பாற்ற முயன்றபோது, கான்கிரீட் சாக்கடை மூடியை மிதித்ததால் அவர் உள்ளே விழுந்து, வலது காலில் காயமடைந்து, எழ முடியாமல் சுமார் 30 நிமிடங்கள் உள்ளேயே சிக்கிக் கிடந்தார்.
பொதுமக்களின் தகவலின் பேரில் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, 'ஹாலிங்' நுட்பத்தைப் பயன்படுத்தி அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மலாக்கா தீயணைப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி முகமட் ஹாபிட்சத்துல்லா ரஷித் தெரிவித்தார்.








