கோலாலம்பூர், மார்ச்.01-
95-வது உலக பொதுப் பாதுகாப்பு நாளை முன்னிட்டு, APM என்றழைக்கப்படும் மலேசியப் பொதுப் பாதுகாப்புப் படையின் திறன், பயிற்சி, தயார்நிலையை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் எனத் துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தையும் பெருகி வரும் இயற்கை பேரிடர் அபாயங்களையும் எதிர்கொள்ளும் வகையில் இப்படை வலுப்படுத்தப்படும் என்றும், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இக்கட்டான காலங்களில் மீட்புப் பணியாளர்கள் ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
பேரிடர் மேலாண்மையிலும் மாந்தநேய உதவிகளிலும் முன்னணியில் இருந்து செயல்படும் APM வீரர்களின் தியாகம் நாட்டிற்கு மிகப் பெரியது என்று தனது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பாதுகாப்பின் அரணாகத் திகழும் இப்படை, எதிர்கால சவால்களைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளையும் பெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.








