கோலாலம்பூர், நவம்பர்.21-
யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர், பிடி3 முதலிய பள்ளித் தேர்வுகள் அகற்றப்பட்டதைப் போன்று ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான எஸ்பிஎம் தேர்வும் அகற்றப்படவிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
எஸ்பிஎம் தேர்வு அகற்றப்படுவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. அந்த தேர்வை அகற்றும் உத்தேசத் திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு இருக்கவில்லை என்று ஃபாட்லீனா சீடேக் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் மாணவர்களின் 11 ஆண்டு கால பள்ளி வாழ்க்கைக்கு, அவர்களின் அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு எஸ்பிஎம் தேர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முந்தைய தேர்வு முறைகளைக் காட்டிலும் எஸ்பிஎம் தேர்வின் மதிப்பீடும், பங்களிப்பும் முற்றிலும் மாறுப்பட்டதாகும்.
யுபிஎஸ்ஆர் என்பது ஆறாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவு நிலையை உறுதிச் செய்வதற்கு வகுக்கப்பட்ட தேர்வுவாகும். பிடி3 தேர்வு, இடைநிலைப்பள்ளியில் மூன்றாம் படிவ மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் அமைந்த தேர்வாகும்.
ஆனால், எஸ்பிஎம் என்பது மலேசிய பள்ளி முறையில் ஒரு மாணவனின் கல்வி ஆற்றலைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதற்கு முக்கிய அளவுகோலாகும். எனவே எஸ்பிஎம் தேர்வை அரசாங்கம் அகற்றாது என்று ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.








