மலேசிய இளைஞர் மன்றமான எம்பிஎம்க்கு இந்த ஆண்டுக்கான நிதியுதவியை 5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்துவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
அதேவேளை, இளைஞர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும்போது விமர்சன ரீதியாக சிந்தித்து, ஒழுக்க நெறிகளையும் மதிப்புகளையும் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலானில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞர் தினம் 2026 கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய அன்வார், மலேசிய இளைஞர் மன்றமானது விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் இளைஞர் அமைப்புகளை ஒருங்கிணைத்து இயக்குவதில் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இளைஞர் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பல்வேறு இளைஞர் சங்கங்களை இயக்கும் பொறுப்பு எம்பிஎம்க்கு உள்ளதாகவும், அதனால் இந்த ஆண்டு அதன் நிதியுதவியை மொத்தம் 5 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க தாம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இளைஞர்களுக்கு விமர்சன சிந்தனை இருக்க வேண்டும் என்றும், பிரதமரையே அவர்கள் விமர்சித்தாலும் அது தவறல்ல என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், விமர்சனங்கள் அறிவும், ஒழுக்க நெறிகளையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதையும் இளைஞர்களுக்கு அன்வார் நினைவூட்டியுள்ளார்.








