கெடா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியான கால நிலையால், பொதுமக்கள் வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, நேரடி சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடாமல் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட்மலேசியா வழங்கிய தகவலின்படி, படாங் தெராப் மாவட்டத்தில் 37°C முதல் 40°C வரை வெப்பநிலை பதிவாகி, வெப்ப அலை நிலை உருவாகியுள்ளதாக மாநில வீடமைப்பு, ஊராட்சி மற்றும் சுகாதாரக் குழு தலைவர் மன்சூர் ஜகாரியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக மழை பெய்யாததால், கெடாவில் மற்ற மாநிலங்களை விட அதிக வெப்பம் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஹரிராயா கொண்டாட்டங்களுக்காக பிறரை சந்திப்பது அல்லது பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வெப்பத்தால் 'Heat Stroke' எனப்படும் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மக்கள் அடிக்கடி நீர் அருந்த வேண்டும் என்றும் மன்சூர் தெரிவித்துள்ளார்.








