கோலாலம்பூர், மே.17-
Azerbaijan தலைநகர், Baku-வில் நடைபெற்று வரும் உலக நகர்ப்புற மன்றம் WUF13 நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற உள்ளூர் மற்றும் பிராந்திய அரசாங்கங்களின் சர்வதேச மாநாட்டில், மலேசியாவின் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் உரையாற்றினார்.
நகரமயமாக்கலில் மனிதநேயம் மற்றும் வீடமைப்பு வழங்கல் ஆகியவை அடிப்படை கொள்கைகளாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மலிவு விலை மற்றும் அனைவரும் அணுகக்கூடிய வீடமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 77 விழுக்காடு மக்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் ஙா கோர் மிங் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதன் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு சலுகைக் கடன் திட்டங்கள், முதியோரின் சமூக மற்றும் பொருளாதார நலன், குடியிருப்பு பகுதிகளில் சூரிய ஆற்றல் பயன்பாடு, தரமான வீட்டு வளாகங்கள் மற்றும் பூங்காக்கள் உருவாக்கம் ஆகியவையும் அரசாங்கத்தின் கவனத்தில் உள்ளதாக ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், காலநிலை மாற்றம் மற்றும் உலக அரசியல் மாற்றங்கள் நகர்ப்புற வளர்ச்சி கொள்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








