டெலிவரி பணியாளரின் மீது சூடான சூப்பை ஊற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தமது ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பேமிலிமார்ட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தாமதமாக விளக்கம் அளிக்கப்பட்டதற்கும், ஊழியரின் செயலுக்கு வருத்தத்தையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட டெலிவரி பணியாளரின் நலனில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் பேமிலிமார்ட் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், டெலிவரி பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் மரியாதையற்ற, பாதுகாப்பற்ற அல்லது அவமரியாதையான நடத்தையை பேமிலிமார்ட் எந்தவிதத்திலும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








