பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பணிக்கு மீண்டும் திரும்ப உதவும் வகையில் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைச் சட்டம் 2017-இன் கீழ் ‘பிரசவ விடுப்பிற்குப் பிந்தைய உதவித்தொகை’ அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் தின விழாவில் உரையாற்றிய அன்வார், பெண்களின் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதமானது சற்று குறைந்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக 25–29 வயது வரையுள்ள பெண்களுக்கான வேலை பங்கேற்பு விகிதமானது 78.9 விழுக்காடாக இருந்தாலும், 35–39 வயதில் அது 68.6 விழுக்காடாகக் குறைகிறது என்றும், இதற்கு மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பொறுப்புகள் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை சமாளிக்க, தற்போதைய 98 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்த பின் கூடுதலாக 30 நாட்கள் வரை விடுப்பு எடுத்தால், அதற்கான நிதியுதவி வழங்கப்படும் என அன்வார் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த உதவித்தொகையானது, ஊழியரின் ஊகிக்கப்பட்ட மாதச் சம்பளத்தின் 80 விழுக்காடு அளவில் ஒருமுறை வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 1.32 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








