கோலாலம்பூர், பிப்ரவரி.21-
மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp-இல் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக மேலும் 3 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடைநீக்கமானது, HRD Corp-இல் விசாரணைகளானது எந்த ஒரு தலையீடும் இல்லாமல், வெளிப்படையான முறையில் நடைபெற்று வருகின்றது என்பதைக் காட்டுவதாக அதன் தலைமைச் செயலதிகாரி ஷாமீர் அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மூவரும் தவறு செய்ததாக முடிவு செய்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவனத்தின் உள் மதிப்பாய்வானது, ஏற்கனவே உள் கட்டுப்பாடுகள், தெளிவான அறிக்கையிடல் வழிமுறைகள் மற்றும் மேம்பட்ட இணக்க மேற்பார்வை தேவைப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு, கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில், நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவான பிஏசி, தலைமை தணிக்கையாளர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் ஆகியவை HRD Corp-இல் நடந்த நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, அதன் உயர் நிர்வாகத்தின் மூன்று உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.








