இந்தியர்களின் நலன் சார்ந்து வகுக்கப்படும் அனைத்து உருமாற்றுத் திட்டங்களின் அமலாக்கங்களை கண்காணிப்பதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று சிலாங்கூர் இந்தியர் ஆலோசனை மன்றம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கண்காணிப்புக்குழுவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி பார்வையின் கீழ் வைக்கலாம் என்று SICC எனப்படும் சிலாங்கூர் இந்தியர் ஆலோசனை மன்றத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ பரிந்துரைத்துள்ளார்.
இந்திய சமுதாயத்தின் சமூகவியல் பொருளாதார உயர்விற்கு மித்ரா உதவித் திட்டங்கள் மற்றும் இந்திய இளம் தொழில்முனைர்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு தெக்குன் கடனுதவித் திட்டங்கள் போன்றவற்றுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்து வரும் மானியங்கள் மற்றும் அந்த மானியங்கள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன, யாருக்கு சென்றடைகின்றன போன்ற அமலாக்க நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இத்தகைய சிறப்பு காண்காணிப்புக்குழு அவசியமாகிறது என்று சார்லஸ் சாண்டியாகோ தெரிவித்தார்.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகின்ற மானியங்கள் எத்தகைய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன, நிதி உதவிக்கேட்டு எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன, எவ்வளவு தொகை உதவியாக வழங்கப்படுகின்றன, இந்த உதவியின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு எத்தகைய தாக்ககங்கள் ஏற்பட்டுள்ளன, இத்தகைய உதவிகள் பெற்றவர்களின் குடும்ப வருமான உயர்ந்துள்ளதா முதலிய அம்சங்களை ஆராயவும், அதன் தாக்கத்தை கண்டறியவும் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்படுவது அவசியமாகும் என்று சார்லஸ் சாண்டியாகோ வலியுறுத்தியுள்ளார்.








