ஜோகூர் மாநிலத் தேர்தல் முடிவுகளுடன், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் அரச மன்னிப்பு விவகாரத்தை இணைத்துப் பேசுவது முற்றிலும் அறிவீனமானது என்று டத்தோ ஸ்ரீ ஹிஷாமுதீன் ஹுசேன் சாடியுள்ளார்.
தேர்தல் செயல்முறையும் அரச மன்னிப்பு நடைமுறையும் வெவ்வேறானவை என்று செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் திட்டவட்டமாக விளக்கினார். ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் பெரும் வெற்றி பெற்றால், அது நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான மக்கள் ஆதரவைக் காட்டும் என்று நஜிப்பின் மகன் முகமட் நசிபுதீன் கூறியிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே ஹிஷாமுதீன் இதனைத் தெரிவித்தார். நசிபுதீன் அனுபவமின்மை காரணமாக அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் காலத்தில் சுயநலத்திற்காகவும், பதவிகளுக்காகவும் இனம் மற்றும் மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிரிக்கக் கூடாது என எச்சரித்த அவர், மிதவாதமும் ஒற்றுமையுமே ஜோகூர் மக்களின் அடையாளம் என்றும் வலியுறுத்தினார்.








