நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக தீடீர் தேர்தல் ஏற்படலாம் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் நேற்று இரவு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதனால், தமது ஆதரவாளர்களும், பொதுமக்களும் திடீர் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோவும், பக்கத்தான் ஹராப்பானும் முடிவெடுத்தாலும் கூட, மந்திரி பெசார்அமினுடின்க்கு தங்களது ஆதரவை வழங்கப் போவதில்லை என்பதில் 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து நெகிரி செம்பிலான் அம்னோ செயலாளர் முஸ்தபா நாகூர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், மாநில ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்ற கட்சி தலைமைத்துவத்தின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மாநில சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர்-ஐப் பதவியில் இருந்து நீக்க முயன்ற மாநிலத் தலைவர்களின் விவகாரத்தை கையாண்ட விதத்தில் அமினுடின் ஹருண் மீது இழந்த நம்பிக்கையை மீண்டும் திரும்பப் பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கிய ஆலோசனைக் கூட்டமானது புத்ராஜெயாவில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தில் தங்களது ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணிக் காக்க, அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கட்சிகள் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








