கோலாலம்பூர், செப்டம்பர்.27-
அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை சர்ச்சை செய்து வரும் தரப்பினரை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாகச் சாடினார்.
அதே வேளையில் பாலஸ்தீன பிரச்சினைக்கு தொடர்ந்து குரல் கொடுக்க மலேசியா தொடர்ந்து அரச தந்திரத் தளத்தைப் பயன்படுத்தும் என்று அன்வார் உறுதி கூறினார்.
இது ஒரு வியூக வழிமுறை என்றாலும் உண்மையை நிலைநிறுத்துவதிலும், ஓங்கி நிற்கும் குரலை பராமரிக்கவும், நடப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தி, மலேசியா விவேகமாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஒரு பெரிய நாடாக இல்லாவிட்டாலும், அனைத்துலக அரங்கில் நீதி மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அதன் நிலையான நிலைப்பாட்டிற்காக மலேசியா இன்னமும் உலக நாடுகள் மத்தியில் மதிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
"பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதில் மலேசியா குரல் கொடுக்கிறது, அதே நேரத்தில் இவ்விவகாரத்தில் மலேசியா, அரச தந்திர வழிகளைப் பயன்படுத்துகிறது. காரணம் மலேசியா சுதந்திரம் பெற்ற, ஒரு கெளரவமிக்க நாடு என்பதால் நாம் சுதந்திரமாக பேச முடியும். நண்பர்களை பெறுவதிலும் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று சபா, சண்டக்கானில் கடல் சார் பிரதேசத்தில் நடைபெற்ற மடானி சுற்றுப் பயணம் மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் 20 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
அமெரிக்காவுடனான உறவுகளை நிராகரித்த ஒரு சில தரப்பினர், தங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நலன் சார்ந்த அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை. குறிப்பாக, தங்களின் உயர் தொழில்நுட்ப உற்பத்தி ஏற்றுமதி பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அமெரிக்காவிற்கு மலேசியாவின் மென்பொருள் ஏற்றுமதியின் மதிப்பு மட்டும் பில்லியன் கணக்கான ரிங்கிட் ஆகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தத் துறையில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் அந்நாநாட்டின் உறவை நாம் முற்றிலுமாக நிராகரித்தால், இழப்பு நாட்டு மக்களுக்கே என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு, சீன அதிபர் ஸீ ஜின்பிங் மலேசியா வந்தார், அடுத்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவிருக்கிறார். மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும் உலக நாடுகள் எந்த அளவிற்கு மதிக்கின்றன என்பதற்கு உலக பெரும் தலைவர்களின் இந்த வருகை சான்றாகும் என்று மலேசியலாவில் அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்க்கும் தரப்பினருக்கு பிரதமர் பதிலடி கொடுத்தார்.
வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜப்பான், கொரியா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்களை, பூமி பந்தில் ஒன்றிணைக்கும் தளமாக மலேசியா விளங்கவிருக்கிறது என்பதை டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவுறுத்தினார்.








