சிரம்பான், பிப்ரவரி.04-
சிரம்பானில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு மீதமுள்ள உணவுகளைக் கழுவி, மீண்டும் சமைத்துப் பரிமாறியதாக நாசி கண்டார் உணவகம் ஒன்றின் மீது எழுந்த புகார்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட, அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகளில் சமரசம் செய்ததற்காக, 2009 ஆம் ஆண்டு உணவு சுகாதார விதிமுறைகளின் கீழ் அந்த உரிமையாளருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர், மீதமுள்ள உணவுகளைக் கழுவி மறுசுழற்சி செய்வது போல், பொதுமக்களால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைரலான அக்காணொளியில், அந்த ஊழியர் கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் Tofu போன்ற மீதமுள்ள உணவுகளைக் கழுவி, பின்னர் அவற்றைத் தட்டுகளில் தனித்தனியாகப் பிரித்து வைப்பது போலான காட்சிகள் பதிவாகியிருந்தன.
அக்காணொளியானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு எதிராக கடும் கண்டனங்களும் எழுந்தன.
இந்நிலையில், 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம், பிரிவு 11-ன் படி, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகமானது வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வரையில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.








