ஈப்போ, ஜூலை,05-
பேராக் மாநிலம் தெலுக் இந்தானில் உள்ள மருத்துவமனையில், நலத்துறை அதிகாரி போல் நாடகமாடி 67 வயது மூதாட்டியிடம் சுமார் 8,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடி செய்ததாக பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருந்த மூதாட்டியிடம், அப்பெண் தன்னை நலத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தியதோடு, மாதம் 2,000 ரிங்கிட் நலத்திட்ட உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
அதற்கான விண்ணப்ப நடைமுறைக்காக நகைகள் தேவைப்படுவதாகக் கூறி, ஒரு தங்கச் சங்கிலி, ஒரு ஜோடி தங்கக் காதணிகள் மற்றும் மூன்று தங்க மோதிரங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் அந்தப் பெண் திரும்பி வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி போலீசில் புகார் அளித்தாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.








