ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.25-
பினாங்கு, ஜாலான் சுல்தான் அஹ்மாட் ஷா பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்திற்கு வெளியே, மர்ம கும்பல் ஒன்று ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் கட்டிடத்திற்கு வெளியே இருந்த போது, திடீரென அங்கு வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்குதலை நடத்தியது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் துறையினர், தடயவியல் சோதனைகளை மேற்கொண்டனர். தாக்குதல் நடத்திய கும்பல் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற வாகனம் குறித்த தகவல்களைச் சேகரித்து வரும் போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று ஜார்ஜ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோஸாக் தெரிவித்தார்.








