பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-
பெட்டாலிங் ஜெயாவில் நேற்று போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் தமது காரைச் செலுத்தி, வாகனங்களுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை 11.28 மணியளவில், ஜாலான் டத்தோ அபு பாக்கார் 16/1 சாலையில் நடந்த இச்சம்பவத்தின் போது, சிவப்பு நிற ஹாண்டா சிஆர்வி காரை போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் செலுத்திய அந்நபர், அவ்வழியே வந்த பல வாகனங்களுடன் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இருப்பினும், இச்சம்பவத்தில் விபத்திற்குள்ளான வாகனங்களில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்நிலையில், அந்த சிவப்பு நிற ஹாண்டா சிஆர்சி காரைச் செலுத்திய உள்ளூர் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுடின் பின் மாமாட் தெரிவித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-ன் கீழ், அந்நபர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளதாகவும் ஷம்சுடின் குறிப்பிட்டுள்ளார்.








