ஜார்ஜ்டவுன், ஜாலான் சுங்கை துவாவில் உள்ள ஒரு வாகனத்தில் பிணமாக மீட்கப்பட்ட 37 வயது பொறியாளர், கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் துறையில் இன்று நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கு பிறகு, போலீஸ் துறை இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த மரணத்தில் எவ்வித குற்றத்தன்மையும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.
கார்பன் மோனாக்சைடு ஒரு நச்சு வாயுவாகும். வாகனங்களில் முறையான காற்றோட்டம் இல்லாத சூழலில் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கொண்டது என்று அவர் விளக்கினார்.








