கடந்த ஏப்ரல் மாதம் B 40 தரப்பை சேர்ந்தவர்களுக்காக தொடங்கப்பட்டபெக்க B40 எனும் ஸ்கிம் பெடூழி சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொற்றாத நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனை மூலம் சுமார் பத்து லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
தங்களை பரிசோதனை செய்து கொண்டவர்களின் 40 விழுக்காட்டினர் மேற்கொண்டு, தொடர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்ற சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பெக்க B40 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை 5 லட்சத்திற்கும் அதிகமான பெக்க B40 பயனாளிகள், 11 கோடி வெள்ளி மதிப்பிலான 60,000 சுகாதார உதவிகளை பெற்றுள்ளனர். இதில் இலவச சுகாதார உபகரணங்களும் அடங்கும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் மொத்தம் 7 ஆயிரம் பெக்க B40 பயனாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெறும் வகையில் உதவித் தொகையையும், 12,000 பேர், போக்குவரத்துக்கான உதவித் தொகையையும் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொற்றாத நோய்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு, உடல் பருமன், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கான காரணிகளை இத்தகைய இலவச பரிசோதனை வாயிலாக B 40 தரப்பை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்து இருப்பதாகடாக்டர் ஜாலிஹா முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








