புத்ராஜெயா,அக்டோபர்
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய இறையாண்மைக்கு உட்பட்ட சபா,லஹாத் டத்து ,பகுதியில் அத்துமீறி நுழைந்த SULU (சூலு ) படையினர், மலேசிய இராணுவத்துடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது தொடர்பில் தன்னை சூலு சுல்தான் என்று கூறிக்கொண்ட ஜமாலு கிரம் உறவுக்காரர் உட்பட 7 பிலிப்பைன்ஸ் பிரிஜைகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி, அந்த 7 பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை நாட்டின் தலைமை நீதிபதி துன் தேங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் ஏகனமனதாக தள்ளுபடி செய்தனர்.
49 க்கும் 75 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எழுவருக்கும் விதிக்கப்பட்ட மரணத்தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக தலைமை நீதிபதி தேங்கு மைமுன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நீடித்த சபா, லஹாத் டத்து அத்துமீறல் சம்பவத்தில் சூலு படையினரின் தாக்குதலில் மலேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர்.








