கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
கோலாலம்பூர் ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது இளைஞரிடம், ஆயுதத்தைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் அனாஸ் சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று ஆகஸ்ட் 1 அதிகாலை ஜாலான் மெட்ரோ புடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 22 முதல் 38 வயதுடைய 5 உள்ளூர் ஆடவர்களையும், 13 மற்றும் 19 வயதுடைய 2 இளம் பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் Jinjang மத்திய காவல் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் பிரிவுகள் 395 மற்றும் 397-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.








