அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலொன்றின் நடவடிக்கையைப் போலீசார் முறியடித்துள்ளனர். அதன் தொடர்பில் நான்கு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதோடு 9.35 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 116 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிலாங்கூர் காவல் துறை தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
கேஎல் ஐஏ, சிப்பாங் மற்றும் மோன்ட் கியாராவில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது அந்நால்வரும் கைதாகி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருட்கள் அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், மலேசியா வெளிநாட்டு சந்தைகளுக்கான ஒரு போக்குவரத்து மையமாக செயல்படுவதாகவும் நம்ப்பப்படுவதாக ஷாசெலி கூறினார்.
கைதான நால்வரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி வரை சமூக வருகை அட்டைகளைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாக அறியப்படுகிறது. தொடக்கக் கட்ட சிறுநீர் பரிசோதனை சோதனைகளில் இருவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.








