ஷா ஆலாம்,ஜன.10
சமூகத்தின் மத்தியில் பதற்றத்தையும், நல்லிணக்கமற்ற சூழ்நிலையையும் உருவாக்கக்கூடிய உணர்ச்சிகரமான எந்தவொரு கருத்தை, நிலைப்பாட்டை அல்லது பரிந்துரையை முன்வைக்கும் போது அனைத்து தரப்பினரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பாஸ் கட்சி இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற விஷயங்களில் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இல்லையென்றால் மிகப்பெரிய தீயை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீப்பொறியாக அது மாறலாம் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாஸ்ஸான் எச்சரித்துள்ளார்.
கருத்துவேற்றுமைகளும், நம்பிக்கைகளும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதத்தை விளைவிக்கும் சட்டத்தை மீறிய செயலை, எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதில் பாஸ் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளதாக தக்கியுடின் ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.
பேரா, புருவாஸ் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஙெ கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் தக்கியுடின் ஹாஸ்ஸான் மேற்கண்டவாறு கூறினார்.








