கோலாலம்பூர் கெப்போங்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சோகச் சம்பவத்தைத் தொடர்ந்து, மக்களைப் பாதிக்கும் சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களை அரசாங்கம் ஆழமாக ஆராய வேண்டும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜாயிட் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் நலனிலும் அரசாங்கம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோலாலம்பூர், கெப்போங், டெசா பார்க் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில், 48 வயது கணவர், அவரது மனைவி மற்றும் ஒன்பது வயது மகள், ஏழு வயது மகன் ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அந்த ஆடவர் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் நம்புகின்றனர். அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் வீட்டுக்குள் கழுத்தில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்தில் கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டுக்குள் உயிரிழந்த மூவரின் மரணம் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது. அதேவேளை, அந்த ஆணின் மரணம் தொடர்பாக திடீர் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்பம் நிதிச் சிக்கலில் இருந்தது என்பதற்கு ஆதாரம் எதையும் முன்வைக்காமல், வறுமை, கடன் சுமை அல்லது அ லோங்-களின் தொல்லை போன்றவை இத்தகைய குடும்ப சோகங்களுக்குக் காரணமாக இருக்குமா என ஜாயிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்.
மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் துயரங்களையும் அரசு தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் முன்னாள் கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜாயிட் இப்ராஹிம் வலியுறுத்தினார்.








