வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு விவகாரம் தொடர்பாக, மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அனுப்பிய கடிதத்தை, எஸ்.பி.ஆர்.எம் மற்றும் சட்டத்துறை அலுவலகமான எ.ஜி.சி-க்கு அனுப்ப பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்துள்ளார்.
கடிதத்தில் உள்ள விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்வதற்காக அனுப்புவதாகவும், விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் அந்தந்த அமைப்புகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டு நடைபெற வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
“அதற்கு அப்பால் செல்வது எனது பொறுப்பு அல்ல. கடிதத்தை எஸ்.பி.ஆர்.எம் அல்லது சட்டத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி அவர்கள் ஆராய்வார்கள்,” என்று அவர் கூறினார்.
கிளாந்தானில் உள்ள மஸ்ஜித் செம்பிலாங் – பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுப்பதற்கு முன்பு யாரும் முன்கூட்டியே முடிவுக்கு வரக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி எஸ்.பி.ஆர்.எம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.
முன்னாள் மனிதவள அமைச்சரான சரவணன், அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாம் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும், தனது குடும்ப உறுப்பினர்களும் அதில் சம்பந்தப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்








