தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடிதம் எழுதியதை முன்னாள் மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், வழக்கை மூடிமறைக்கவோ அல்லது பிரதமரின் பாதுகாப்பைப் பெறவோ அவர் தலையிட வேண்டும் என்று கோரி அந்தக் கடிதம் எழுதப்படவில்லை என சரவணன் மறுத்தார்.
தனது வழக்கு குறித்து முழுமையான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை அல்ல என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு தொடர்பாக 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“இந்தக் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கவோ அல்லது எனக்குப் பாதுகாப்பு அளிக்கவோ நான் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை,” என்றார் சரவணன்.








