பினாங்கில் மூன்று தனித்தனி போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை போலீசார் முறியடித்துள்ளனர். கணவன், மனைவி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டதுடன், 3.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 15 முதல் 22ஆம் தேதி வரை பினாங்கு, தீமோர் லாவுட், செபராங் பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை தெங்கா பகுதிகளில், பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் நடத்தப்பட்டன என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டெனிஸ் லிம் தெரிவித்தார்.
தீமோர் லாவுட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில், 26 வயது கணவரும் 25 வயது மனைவியும் இந்தக் கும்பலுக்குத் தலைமை வகித்ததாக நம்பப்படுகிறது.
மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு 89 ஆயிரம் ரிங்கிட் என்றும் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது என்றும் டெனிஸ் லிம் தெரிவித்தார்.








