கம்போடியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி,போதைப்பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது அந்த நாட்டின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஒரு மலேசியப் பிரஜையான கே. ஹேமகவினுக்கு அரச மன்னிப்பு கிடைக்கும் வாய்ப்பு மிககுறைவே என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
தனது சிறைத்தண்டனையில் குறைந்த பட்சம் 20 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் மட்டுமே அவருக்கு அரச மன்னிப்பு கிடைப்பதற்கு குறித்து பரிசீலிக்கப்படும். தவிர சிறைத்தண்டனையில் ஒரு வருடம் குறைக்கப்படலாம் அல்லது மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படலாம் என்று வெளியுறவு துணை அமைச்சர் முகமது ஆலமின் தெரிவித்தார்.
ஹேம கவின், தமது காதலி மற்றும் அவரின் அக்காள், அவரின் காதலன் ஆகியோர் கம்போடியா நாட்டிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள கடந்த 2016 ஆம் அந்த இந்தோ - சைனா நாட்டிற்கு சென்றிருந்த போது, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஹோட்டல் அறையில் போதைப்பொருளுடன் பிடிபட்ட ஹேமகவினுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கம்போடியா தலைநகர் நோன்பென் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஹேமகவினை விடுவிப்பதற்கு அவரின் தந்தை எம். கார்த்திகேசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்விக் கண்டன.








