பத்து காஜா, பிப்ரவரி.27-
பேராக், பத்து காஜாவில் பட்டாசு வீசி தெரு நாய் ஒன்றைக் கொன்ற குற்றத்திற்காக 64 வயது உணவக உரிமையாளருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
64 வயதான வோங் பான் சாங் என்ற அந்த உணவக உரிமையாளர், பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி இரவு 7:30 மணியளவில், பத்து காஜா, பூசிங், ஜாலான் செரோஜா பகுதியில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த வாயில்லா ஜீவன் மீது பட்டாசு வீசித் தாக்கியாகவும், பட்டாசு வெடித்த அந்த கோரமான சத்தத்தில், அந்த அப்பாவி நாய் நிலைகுலைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மொத்தக் கொடூரமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் உலுக்கியது. இந்தச் சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்ததுடன் , விலங்கு நலச் சட்டம் 2015- ஆவது பிரிவின் கீழ் அந்த உணவக உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த உணவக உரிமையாளர், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 2 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று மாஜிஸ்திரேட் Azlin Zeti Zainal Abidin உத்தரவிட்டார்.








